தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்
இதோ !!!
கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம்
காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்
எங்களின் எதிர்காலமே
காங்கிரஸின் மனசாட்சியே
காங்கிரஸின் உரிமைக்குரலே
எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே
எங்கள் தலைவரே
இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு
பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ?
காசு இருந்தால் – தாய், தந்தையைத் தவிர
வேறு எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று
ஒரு திரைப்படத்தில் வசனம் வந்தது.
அது உண்மை தான் என்று தோன்றுகிறது.
மேலே காணும் விளம்பரங்களைப் பார்த்தால் –
இந்த வார ஜூனியர் விகடனில் மட்டும்
மேற்காணும் 7 முழு பக்க
விளம்பரங்கள். மற்ற பத்திரிகைகளிலும் உண்டு.
ப.சிதம்பரம் அவர்களின் ஒரே மகன் கார்த்தியின்
பிறந்த நாளை முன்னிட்டு (16/11/2010)
தமிழ் நாடு முழுவதும் ப்ள்க்சி பேனர்கள்.
(40 அடிக்கு 20 அடி அளவில் )
விதம் விதமான வண்ணச் சுவரொட்டிகள் !
எவ்வளவு செலவாகி இருக்கும் என்று
கற்பனை செய்யவே முடியவில்லை !
தலைவர்கள் என்றால் –
மக்களுக்காகப் பாடுபட்டார்கள்.
அவர்கள் துன்பத்தை,
துயரத்தைப் போக்கப் போராடினார்கள்.
கசையடி வாங்கினார்கள் –
தடியடிகளைத் தாங்கினார்கள் –
சிறைக்குச் சென்றார்கள் –
செக்கிழுத்தார்கள் –
பட்டம் பதவிகளைத் துறந்தார்கள்
சொத்துக்களை இழந்தார்கள்
மனைவி, மக்கள், சொந்தங்களை இழந்தார்கள்
மக்களால், மக்களுக்காக, மக்களில் ஒருவனாக
– தலைவர்கள் உருவானது அந்தக் காலம்.
இப்போது தலைவனாக வேண்டுமானால்
இந்த தகுதிகள் எதுவுமே வேண்டாம்.
கீழ்க்கண்ட இரண்டு தகுதிகளில் ஏதேனும்
ஒன்று இருந்தால் போதும். தலைவன் ஆகி விடலாம் !
1) அப்பாவோ, அம்மாவோ ஏற்கெனவே
அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்க வேண்டும்.
2) அப்பாவோ, தாத்தாவோ -கணக்கில் அடங்காத
அளவிற்கு (?) பணம் சம்பாதித்து
வைத்திருக்க வேண்டும் !
கார்த்தியின் தாத்தா -திரு பழனியப்ப செட்டியார் அவர்கள்
கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் –
தான் சேர்த்து வைக்கும்
பணம் தன் பேரனுக்கு இந்த வகையில் கூட
உதவும் என்று.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து பாட்டு ஒன்று
நினைவிற்கு வருகிறது –
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம் – வந்தே மாதரம் – வந்தே மாதரம்
-முன்பெல்லாம் திமுகவினர் இதில் கடைசி வரியை
மட்டும் மாற்றிப் பாடுவது வழக்கம் –
வந்தே ஏமாற்றுகிறோம் !
தந்தை பெயரைப் பயன்படுத்தாமல்,
குடும்பச் சொத்தைத் தொடாமல் –
ஒரு கார்பரேஷன் கவுன்சிலர் கூட
ஆக முடியாதவர் தான் இவ்வளவு
ஆட்டம் போடுகின்றார்.
எல்லாம் தமிழர்களின் முட்டாள் தனத்தின்
மீது நம்பிக்கை வைத்து தான் ….