சோனியா காந்தி விமரிசனத்திற்கு
அப்பாற்பட்டவரா ?
தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில்,
கடந்த வெள்ளிக்கிழமை இரவு,
தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி
ஒன்று நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து
விமரிசனம் செய்து பேசியதைத் தொடர்ந்து,
அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும்,
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும்,
காங்கிரஸ் கட்சியினர்
கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன பேசினார்கள்
என்று செய்தியில் தேடினேன். கிடைத்த
விவரம் கீழே –
—————————————-
விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் –
“காங்கிரஸ் தலைவர் சோனியா இந்த
நாட்டில் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல.
ஆனால் அவர் தான் மத்திய அரசை
இயக்கி வருகிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் ஸ்டாம்ப் போல்
செயல்பட்டு வருகிறார். அவரால் தன்னிச்சையான
முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.
சோனியா சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் அல்ல.
அவர் ஒரு பலவீனமான தலைவர்.
அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.”
———————————————
இதில் எந்த விதத்தில் குற்றம் காண்கிறார்கள் ?
ஏன் – தமிழ் நாட்டில் கூட, பெரும்பாலான மக்கள்
இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள்.
அரசியலுக்கு வந்து விட்டு, எங்கள் அன்னையை
யாரும் விமரிசனம் செய்யக்கூடாது என்றால் எப்படி ?
தங்கபாலுவைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் –
பிழைப்பிற்காகவும், பதவி சுகம் பெறவும்,
அவர் அன்னையாக இருக்கலாம்.
மற்றபடி இது ஜனநாயக நாடு.
அரசியல் சட்டம் 14வது சரத்து இந்த நாட்டின்
குடிமக்கள் அனைவருக்கும், பேச்சுரிமையும் –
எழுத்துரிமையும், கருத்துரிமையும் அளிக்கிறது.
அரசியல் நடவடிக்கைகள் எதையும் குறை கூற
இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ள
உரிமையை யாரும் பறிக்க முடியாது.
இங்கென்ன ராஜபக்சே அரசா நடக்கிறது ?
வேண்டாம். அநாவசியமாக அன்னையின்
பிள்ளைகளின் கோபத்தைக் தூண்ட வேண்டாம்.
தங்கபாலு அண்ணாசாலையில் ஓடிப்போய்
மறியல் செய்ய ஆரம்பித்து விடுவார் !