முதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ……!!!

k -young

93 வயதில், 6-வது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரத்
துடிக்கும் ஒரு தலைவரின் பின்னணியை முழுவதுமாகத்
தெரிந்து கொள்ள உதவும் இன்னொரு தகவல் –

முதலில், கல்கி இதழில் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி –

———————————

“ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில்
போலீஸ் வன்முறையில் செத்துப்போன கல்லூரி மாணவன் உதயகுமாரின்
அப்பாவின் ஞாபகம் –
கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த
ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்த
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில்
கலந்து கொண்டதுதான்.

இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, ” இது என் மகன் இல்லை ”
என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசாரால் நிர்ப்பந்திக்கப்பட்ட
உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? ”

————————————–
இது குறித்து பொதுவாக வெளிவந்த செய்திகளின் சாராம்சம் –

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்பாக முதலமைச்சர்
கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான விழா 1971 ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு
தெரிவிக்கத் தொடங்கினர்.. கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத க
ருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட
மாணவர்கள் எழுப்பிய சர்ச்சை.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ்,
இந்திய மாணவர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள்
சிலர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு கருணாநிதியைக் கேலி செய்தனர்.
கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித்
தொங்கவிட்டதாகச் செய்திகள் பரவின.
எனினும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழா காலையில்
நடந்துமுடிந்தது.

முதலமைச்சர் கருணாநிதி புறப்பட்டுவிட்டார். அதன்பிறகுதான் அடுத்த
சர்ச்சை வெடித்தது. திடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள்
அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர்.
லத்தி கொண்டு தாக்கியதால் மாணவர்கள் பலருக்கும் பலத்த காயங்கள்
ஏற்பட்டன. அடிபட்டு, உதைப்பட்டு, ரத்தமும் ரணமுமாகக் கிடந்த மாணவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப்
பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால்
தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில்
உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதந்துகொண்டிருக்கும் தகவல்
மாணவர்களை எட்டியது.
ஏராளமான மாணவர்கள் குளத்தைச் சுற்றித் திரண்டனர்.
காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார்
குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக்
குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாரா என்ற சர்ச்சை பலமாக எழுந்தது.

காவல்துறை தரப்போ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று
திட்டவட்டமாகச் சொன்னது. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய்
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை –

உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை.

காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே
பெற்ற மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள்
என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இதை உறுதிப்படுத்தினார்
உதயகுமாரின் தம்பி.

—————————————

இதனைத் தொடர்ந்து – இந்த நிகழ்வின் முழு பின்னணியையும்
ஆதாரபூர்வமாக சேகரிக்க முயன்றேன். பெரும் முயற்சிக்குப் பிறகு,
பதவி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின்
பேட்டி ஒன்று காணக் கிடைத்தது.

விருப்பு வெறுப்பில்லாமல், முழு விவரங்களையும்
சொல்கிறது இந்தப் பேட்டி….. ( மிகவும் நீண்ட இந்த பேட்டியிலிருந்து
இந்த நிகழ்வுக்கு தொடர்பான விஷயங்களை மட்டும் தந்துள்ளேன். )

—————————

Justice-K-Chandru
ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் வார்த்தையில் –

இந்தச் சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு
டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கருணாநிதிக்குக் கருப்புக் கொடி காட்டும்
போராட்டத்தை மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

ஆனால் போலீசார் உதவியுடன்
இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது.

இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குப் பெற்றோருக்கும் அனுமதி உண்டு.
எனவே அவர்களும் வந்திருந்தனர்.

பெற்றோருக்கென வைக்கப்பட்டிருந்த உணவைப் போலீசார் உண்டதால்
போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கும்
கலைந்து ஓடினர். இதில் நெல்லிக்குப்பம் பெருமாள்சாமி என்னும்
ஆசிரியரின் மகனான உதயகுமார் என்ற மாணவரின் சடலம்
ஏரியில் மிதந்தது.

போலீஸ் தடியடி மூலம் அவர் கொல்லப்பட்ட செய்தி நாளிதழ்
ஒன்றின் மூலம் தெரியவந்தது.
எனவே உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி நீதி விசாரணை
கோரினோம். கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில்
தன்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும்
இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் கூறி
இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றார் கருணாநிதி.

ஆனால் மாணவர் அமைப்புகள் இதை விடவில்லை.
எனவே வேறுவழியின்றி என்.எஸ். ராமசாமி தலைமையில்
விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

கடலூரில் விசாரணை நடைபெற்றது.
எனக்குக் கடலூரில் எந்த லாட்ஜிலும் இடம்தரக் கூடாது
என அரசு எச்சரித்திருந்ததால் நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சென்றேன்.

திமுக விலிருந்து யாரும் சாட்சியாக வரவில்லை.
நாங்கள் 21 பேரை சாட்சியாக விசாரித்தோம்.
எங்களுக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என நாங்கள்
கேட்டுக்கொண்டதால் இறுதி விசாரணைக்கு சிதம்பரம் வந்தார்.
3 மணி நேரம் சிறப்பாக வாதாடினார்.

தனது தீர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தடியடி
நடத்தப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி இறந்தது உதயகுமார் தான்
என்று குறிப்பிட்டுவிட்டார்.

அதுவரை இறந்தது உதயகுமாரே இல்லை என்று கருணாநிதி கூறிவந்தார்.
ஆனால் இந்தத் தீர்ப்பின் மூலம் இறந்தது உதயகுமார்தான் என்பது
உறுதியாகிவிட்டது.

…….

தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களில் நான் பங்குபெற்றதால்
(கருணாநிதி) அரசுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. அண்ணாமலைப்
பல்கலைக்கழகக் கலவரத்திற்கு தீவிரவாத மாணவர்களின் சதியே
காரணம் எனக் கூறி அரசு என்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தது.

———————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Responses to முதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ……!!!

  1. selvarajan சொல்கிறார்:

    அய்யா … உதயகுமார் பற்றி பலவித கருத்தகள் அப்போதைய காலக்கட்டத்தில் உலா வந்தது என்பதே உண்மை — இன்றும் பலர் அவனோடு படித்தவர்களே வெளியில் கூற தயங்கி ஒரு பய உணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் — பட்டும் படாமலும் தான் நிறைய பதிவுகள் உலா வருகின்றன … அன்று படித்த பல பேர் கலைஞர் தயவில் — அவர் அரசாங்கத்தில் வேலையை பெற்று — இன்று ” ஓய்வு ” பெற்று இருப்பார்கள் என்பதே உண்மை … அதுதான் நடந்ததை கூற தயங்குகிறார்கள் …. !!! — அடுத்து ஒரு ” காமெடியான செய்தி என்று எனக்கு படுகிறது ” … அது :– // ‘தமிழ்நாட்டில் என்ன நடக்குது?!’ -பா.ஜ.க நிர்வாகிகளிடம் கடுகடுத்த மோடி http://www.vikatan.com/news/tamilnadu/63809-poor-performance-modi-angry-with-tn-bjp-leaders.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3189 //

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.